"பொருளுலகில் உள்ள கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிப் படிப்பிற்கும், கல்லூரிப் படிப்பிற்கும் வகைவகையான கல்வித் திட்டங்களை அரசாங்கமும் கல்வியாளர்களும் முனைந்து உருவாக்கி வைத்து அவற்றை நிறைவேற்றிடுவதற்காக பள்ளிகளையும், கல்லூரிகளையும் அமைத்து செயல்படுத்துவது போலவே, அருளுலகக் கல்விக்கும் தெளிவான திட்டங்களையும், பள்ளிகளையும், கல்லூரிகளையும் வைத்து கல்வி கற்கச் செய்வதே மெய்யான இந்துமதம்" - என்ற இந்தக் கருத்தை விளக்கி குருதேவர் தமது அடியான் ஒருவருக்கு எழுதிய அஞ்சல் இந்த மாத இதழில் முதலாவதாக உள்ளது.
அடுத்ததாக தனி மனித வளர்ச்சியே சமுதாயப் புரட்சியையும், அரசியல் மறுமலர்ச்சியையும் உருவாக்கிடும் என்பதனை மற்றொரு அடியானுக்கு விவரித்து குருதேவர் அவர்கள் எழுதிய அஞ்சல் உள்ளது.
குருதேவர் தம் காலத்தில் வாழ்ந்த இந்துமதப் பெரியோர்களுக்கு எல்லாம் தம்மோடு இணைந்து செயல்படுவதற்காக அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார். அவ்வாறு பெங்களூரு திருச்சி சுவாமிகள் என்பவருக்கு குருதேவர் தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டு விடுத்த அஞ்சல் ஒன்றினை இறுதியாகக் காணலாம்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.