இந்த இதழில் குருதேவர் அவர்கள் வெளியிட்ட இரு அறிவிக்கைகள் வழங்கப் படுகின்றன.
இந்த அறிவிக்கையில் குருதேவருக்கு அறிமுகமும், அருட்பணி விரிவாக்கத் திட்டத்திற்கு அறிமுகமும், இந்துமதம் பற்றிய விளக்கமும் தந்த பின்னால் ஆன்மா, ஆருயிர், ஆவி ஆகியனவற்றின் உருவ அமைப்பின் படங்களும் தரப்படுகின்றன. இந்த விளக்கங்களின் மூலம் இந்துமதம் ஒரு விஞ்ஞானம் என்பதற்கான வாசகங்கள் 36 வழங்கப்பட்டுள்ளன.
2. அருவுருவ மூகாம்பிகை ஆலயம் பற்றிய அருளுலக அறிவிப்பு
சேலம் மாவட்ட வேம்படிதாளம் என்ற ஊரில் அமைக்கப்பட்ட அருவுருவ மூகாம்பிகை ஆலயம் மற்றும் ஆதிசங்கராச்சாரியார் முச்சத்தி பீடக் கோட்டம் பற்றிய விளக்க அறிவிக்கை உள்ளது. இதில் பல அரிய அருளுலக விளக்கங்கள் உள்ளன.
இறுதியாக உள் அட்டையில் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் வழங்கிய குருபாரம்பரிய வாசகம் இடம் பெறுகிறது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.