உள்ளுறையும் கட்டுரைகள்
43,73,122ஆம் ஆண்டின் ஆடி மாத இதழாகிய இந்த வெளியீட்டில் குருதேவர் தாம் தயாரித்த அருளுலக வாரிசுகளுக்கு அறிவுரைகள் பல வழங்கி அவர்களுக்குள் இருக்கும் இருள்களை அகற்றிட விடுத்த திருவோலை முதலாவதாக இருக்கின்றது. இந்த அஞ்சல் வடிவக் கட்டுரை மதுரையைச் சேர்ந்த இயக்கத்தின் முழுநேர ஊழியர் ஒருவரின் குடும்பத்திற்கு அறிவுரைகள் வழங்கி அதன் மூலம் அனைத்து சித்தரடியான்களுக்கும், சித்தரடியாள்களுக்கும், சித்தரடியார்களுக்கும் பல விளக்கங்களை வழங்கிடுவதாக அமைந்து உள்ளது. தமிழர்களை இந்துக்களாக ஆக்கிடும் பணியையும், இந்துக்களை இந்துக்களாக ஆக்கிடும் பணியையும் முதன்மைப்படுத்திக் குருதேவர் விளக்குகின்றார்.
அடுத்ததாக, சேலம் மாவட்டத்து அடியான்களுக்காக விடுத்த குருவாணை விளக்க அஞ்சல் அமைந்துள்ளது. இதன் மூலம் குருதேவர் எல்லா வட்டாரங்களிலும் சித்தர் நெறி தழைத்தோங்கிடச் செயல்படும் அனைவருக்கும் விளக்கங்கள் வழங்குகின்றார்.
மூன்றாவதாக மணப்பாறை வட்டாரத்தைச் சேர்ந்த இந்துமத அடிகளார் ஒருவருக்கு தனிமரமாக இருக்கக் கூடாது என்பதை விளக்கியும், எப்படி குருவழிச் சித்திகள் பெற்றுச் செயல்பட வேண்டும் என்பதை விளக்கியும் குருதேவர் விரிவாக எழுதிய அஞ்சல் அமைந்துள்ளது.
இறுதியாக, குருதேவர் வழங்கியுள்ள சன்னிதானப் பட்டங்களை சித்தி செய்திட அடியான்கள், அடியாள்கள் மற்றும் அடியார்கள் சித்தி பூசை செய்வது எப்படி என்பதை விளக்கி எழுதப்பட்ட அஞ்சல் உள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.